ஓசூர் மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா
மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன் நகரில் புதிதாக ஸ்ரீ மகா ராஜகணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு தீர்த்தகுடம், முளைப்பாரி, பம்பை வாத்தியங்கள் ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கங்கா பூஜை, கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. பின்னர் யாகசாலையில் இருந்து புனித கலசங்களில் தீர்த்தங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகர், முருகன், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் மூலம் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.