ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை கைவிடவில்லை: திருமாவளவன்
காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாகவே அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேச தொடங்கினர்.;
சென்னை,
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக உள்ள விசிக உள்ளது. இந்தநிலையில், கடந்த ஆண்டு அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன்பின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இது தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியது.
காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாகவே அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேச தொடங்கினர். அதேபோல் விசிகவும் அந்த குரல்கள் எழத் தொடங்கியது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று இரு கட்சிகளும் கூறி வருகின்றன. இந்த இரு கட்சிகள் மட்டுமல்லாமல், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இதே குரலில் பேசி வருகின்றன. இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கூட்டணி கட்சிகளால் சில பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 1999ல் தேர்தல் அரசியலுக்குள் விசிக வந்த நாள் முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகிறோம்.
2016ஆம் ஆண்டு இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவரையும் அழைத்து கருத்தரங்கம் நடத்தி மக்கள் முன்னிலையில் வைத்தோம். அந்த கோரிக்கை காலம் கனியும் போது சரியான நேரத்தில் முன் வைக்கும். 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வாய்ப்புகள் இல்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். இம்முறை இரட்டை இலக்கத்தில் விசிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நாங்கள் கைவிடவில்லை. 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை விசிக திமுகவிடம் வைக்கவில்லை. அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அது மாறாது.ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று இந்த அர்த்தத்தில்தான் ரவிக்குமார் பேசியிருப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.