"சுட்டுக்கொல்ல வேண்டும்" பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

சிறுமியை மர்ம நபர் மாந்தோப்புக்கு தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
"சுட்டுக்கொல்ல வேண்டும்" பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12-ந்தேதி மதியம் பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, பின்தொடர்ந்து சென்றார்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் திடீரென அந்த ஆசாமி, சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்றார். பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதற்கிடையே சிறுமி வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர் மாந்தோப்புக்கு தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சென்றபோது, என் மகளை வயது 10) ஒருவன் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பாட்டி வீட்டிற்குச் செல்ல பேருந்து வசதி இல்லை; நடந்துதான் செல்ல வேண்டும். எனது மகளை அடித்து, துன்புறுத்தியுள்ளான். அங்கிள்.. என்னை விட்ருங்க அங்கிள். என்னை அடிக்காதீங்க.. என்னை கஷ்டப்படுத்தாதீங்கன்னு என் பொண்ணு அழுதுருக்கா; ஆனால் கத்தினால் கொலை பண்ணிடுவேன்னு அவன் மிரட்டி இருக்கான். என் பிள்ளைய அடிச்சு, வாய் எல்லாம் ரத்தம் வர வெச்சு பாலியல் வன்கொடுமை செய்திருக்கான்.

மிகவும் ஆபத்தான நிலையில் எனது மகள் சிகிச்சை பெற்று வருகிறார். எனது மகளை வன்கொடுமை செய்த அந்த நபர் யார் என்று காவல்துறை இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. உடடினயாக அந்த நபரை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். எனது மகளுக்கு ஏற்பட்டதுபோல வேறு யாருக்கும் நிகழக்கூடாது. எனது மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரை சுட்டுக்கொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், "குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர். சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com