மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த சில வாரங்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10-ந் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுவது வழக்கம். இதன் காரணமாக நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.