தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் நியமனம் செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்தும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றாமல் வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி வக்கீல் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்துள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், “சட்ட விதிகளின்படி, வக்பு வாரியத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதை அரசு பின்பற்றவில்லை” என வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.