தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.;
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் பின்வருமாறு மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தக்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் உட்பட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.