சென்னையில் சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் சென்னையில் 6ம் தேதி தொடங்குகிறது;
சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் தொடருக்கான முன்னேற்பாடுகள் குறித்து துணை முதல்-அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 மற்றும் 5150 டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (29.12.2025) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 (SDAT INDIA INTERNATIONAL YOUTH SAILING CHAMPIONSHIP IIR) மற்றும் 5150 டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது.
அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7ஆவது “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை – 2023” போட்டி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான உலக சர்ஃபிங் லீக் போட்டி, HCL சைக்ளோத்தான் (CYCLOTHON) போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ”சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025” என பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரையில் ஹாக்கி ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை தமிழ்நாடு - 2025 போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 (SDAT INDIA INTERNATIONAL YOUTH SAILING CHAMPIONSHIP IIR) மற்றும் 5150 டிரையத்லான் சென்னை - 2026 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் 2026 போட்டியொட்டி, சென்னையில் 6.1.2026 முதல் 9.1.2026 வரை பல்வேறு வகையிலான படகுப்போட்டிகள், பாய்மரப் பலகை சறுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து, சீசெல்ஸ், மொரிசியஸ், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், அல்ஜீரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, தைவான், ஸ்வீடன், ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதுவரை பாய்மரப் படகுப்போட்டிகளை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து ரசித்த சென்னை மக்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இந்த போட்டி நீங்காத நினைவுகளை அளிக்கும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் 5150 டிரையத்லான் சென்னை - 2026 போட்டியையொட்டி 1.50 கி.மீ நீச்சல், 40 கி. மீ சைக்கிளிங், 10 கி.மீ ஓட்டம் என மொத்தம் 51.50 கி.மீ தூரம் கொண்ட இரும்பு மனிதன் 5150 டிரையத்லான் சென்னை போட்டி 10.1.2026 மற்றும் 11.1.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் 1.50 கி.மீ தூரம் கொண்ட நீச்சல் போட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நீலக்கொடி கடற்கரையில் தொடங்கி கோவளம் கடற்கரை வரையிலும், 40 கி.மீ. தூரம் கொண்ட சைக்கிளிங் போட்டி கோவளம் பீச் முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக MGM பீச் ரிசார்ட் வரையிலும், 10 கி.மீ தூரம் கொண்ட ஓட்டப்பந்தயம் MGM பீச் ரிசார்ட் தொடங்கி கிழக்கு கடற்கரை சாலையில் மாயாஜால் வரையிலும் என 51.50 கி.மீ தூரத்திற்கு நடைபெற உள்ளது. இந்தப்போட்டிகளில் 1,200க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
இந்த இரண்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்தி தமிழ்நாட்டின் பெருமையை உலகறிய செய்யும் வகையில் போக்குவரத்து, பாதுகாப்பு, அவசர மருத்துவ சேவைகள், தங்குமிட வசதி, வீரர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து துறை அலுவலர்களுடனும் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.