வாக்காளர் திருத்தப்பணியில் தலையீடு: திமுகவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி
திமுக நிர்வாகிகள் வாக்காளர் திருத்தப் பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் தி.மு.க. அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், நாளை (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இந்த கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, தி.நகர் சத்தியா, அசோக், ராஜேஷ், புரசை பாபு, கந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.