வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ் அப் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அதில், வாட்ஸ் அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்படும். ஒவ்வொருவரின் செல்போன் எண்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு இணைக்கப்படும். எனவே அரசியல் ரீதியாகவோ, நடப்பு விவகாரங்களிலோ அரசையோ, பிரதமரையோ விமர்சித்து வீடியோவோ அல்லது தகவலோ யாருக்கும் அனுப்ப வேண்டாம்.
அதை மீறினால் போலீசார் நோட்டீசு அனுப்புவதோடு, தண்டனைக்குரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது தவறான தகவல். மத்திய அரசு இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை” என்று கூறப்பட்டு உள்ளது.