புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
கொலை வெறி கும்பல் கைகள் இருந்தால்தானே காளைகளை அடக்குவாய் என்று கூறியவாறு, இரண்டு கைகளையும் வெட்டினர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் இன்பரசன் (வயது 23). ஜல்லிக்கட்டு வீரரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி விற்பது மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது ஆகியவற்றில் முன்விரோதம் இருந்து வந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இன்பரசன் காளைகளை வாங்குவதற்குகாக வெளியூர் சென்றுவிட்டு இரவில் ஊர் திரும்பினார். இன்று காலை அவர் வேலைக்கு செல்ல தயாராகி வந்தார். பின்னர் பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவர் அழகாம்பாள்புரம் அரசு பள்ளி அருகே நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இன்பரசன் அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை ஓட ஓட விரட்டினர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை கொலை வெறி கும்பல் கைகள் இருந்தால்தானே காளைகளை அடக்குவாய் என்று கூறியவாறு, இரண்டு கைகளையும் வெட்டினர். மேலும் உடலின் பல்வேறு இடங்களில் இன்பரசனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் இன்பரசன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உயிருக்கு போராடிய இன்பரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே இன்பரசன் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலின் பேரில் வல்லதரிஆக்கோட்டை போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட இன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் நளினி விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவத்தில் இன்பரச்னின் எதிரியாக இருந்த விக்னேஷ் உள்ளிட்ட 7 பேர் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய விக்னேஷ் உள்ளிட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.