தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்: ரூ.15 லட்சம் மதிப்பில் சீதனம் வழங்கல்
ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.;
தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சுயம்வரம் நடந்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்வு செய்தனர். பின்னர் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 5 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
தேர்வு செய்த 5 ஜோடிகளுக்கும் நேற்று காலை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மணமக்கள் கேக் வெட்டினர். ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் வீதம் 5 ஜோடிகளுக்கும் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண உடைகள், மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி பெட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சேர், குக்கர், மின் விசிறி, சூட்கேஸ், ஸ்டூல், சமுக்காளம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி போன்ற சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருமண விழாவில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் நல் உள்ளம் கொண்ட பிறரன்பு உடையோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு நல்லாசி வழங்கினார்கள். ஏற்பாடுகளை லூசியா இல்ல இயக்குனர் ஜான் பென்சன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.