கரூர் சம்பவம்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ.: புஸ்சி ஆனந்த் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
கரூர்,
கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் கோர்ட்டில் கடந்த 22-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து கரூர் கோர்ட்டில், சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் கேட்டு த.வெ.க. வக்கீல்கள் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, த.வெ.க.வினருக்கு சி.பி.ஐ. தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை நகலை கொடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து த.வெ.க. வக்கீல்கள் முதல் தகவல் அறிக்கை நகலை பெற்றுக்கொண்டனர்.
சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கரூர் டவுன் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தான் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ. விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.