வட்டி மானிய திட்டத்தால் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி பெறும்: ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
வட்டி மானிய திட்டத்தால் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி பெறும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.;
திருப்பூர்,
திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தரும் நகராக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கான வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இது ஏற்றுமதி துறைக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை கொண்டு வருகிறது. ஏற்றுமதிக் கடனுக்கான செலவைக் குறைத்தல் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் நிதி கட்டுப்பாடுகளை எளிதாக்கும் நோக்கத்துடன், ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஏற்றுமதிக் கடனுக்காக 2.75 சதவீத அடிப்படை வட்டி மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர் ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சம் அதிகபட்ச வட்டி மானியம் கிடைக்கும். இந்த திட்டத்துக்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட உள்ளது. என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறியதாவது:- அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பின் தாக்கத்தால் ஏற்றுமதியாளர்கள் தற்போது கடுமையான பணப்புழக்க சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த சரியான நேரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் தேவையான நிதி ஆதரவை இந்த வட்டி மானியம் வழங்கும்.
குறிப்பாக தொழில் ஒரு சவாலான கட்டத்தில் செல்லும் இந்த நேரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு புத்தாண்டுக்கான வலுவான தொடக்கமாக அமைந்ததுள்ளது. இந்த ஆண்டு மிகவும் சாதகமானதாகவும், மேம்பட்ட ஏற்றுமதி வளர்ச்சியைக் காணும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.