தூத்துக்குடியில் நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவையர் அலுவலர்கள் சார்பாக மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.;
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை நிர்வாகமும் அரசும் பணிச்சுமையை குறைக்கவும், ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை செய்யாமல் பணியை முறைப்படுத்தி முன்னுரிமைப்படி பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா மாறுதல் உள்ளிட்ட நிலஅளவை பணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள குறுவட்டங்களுக்கு குறுவட்ட அளவர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவையர் அலுவலர்கள் சார்பாக மாவட்ட தலைவர் காளிராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலஅளவையர்கள் திரளாக கலந்து கொண்டனர்.