குறைந்தது 100 நாட்கள் சட்டப்பேரவை அமர்வு: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்
"நாடு போற்றும் நல்லாட்சி" என்று விளம்பர நாடகங்களை நடத்துவது தான் சாதனையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திமுக ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டப்பேரவை நடத்தப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 376-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?
தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 40 நாட்கள் கூட சட்டப்பேரைவைக் கூட்டம் நடைபெறாத நிலையில், "நாடு போற்றும் நல்லாட்சி" என்று நாற்திசையிலும் விளம்பர நாடகங்களை நடத்துவது தான் திமுகவின் சாதனையா?
நாடாளுமன்ற அவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 375-ல் கூறிவிட்டு, எதிர்கட்சியினர் பேசுவதை மறந்தும் கூட ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்யும் இந்த சர்வாதிகார ஆட்சி எப்படி பாகுபாடின்றி மக்களுக்கு சேவை செய்யும்?
தமிழகத்தில் தினமும் தலைவிரித்தாடும் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் எதிர்கொள்ளத் திராணியின்றி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து, சட்டப்பேரவையைச் சரிவர கூட்டாத திமுக அரசை மீண்டுமொருமுறை, சட்டப்பேரவைக்குத் தமிழக மக்கள் அனுப்பமாட்டார்கள்! இது உறுதி!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.