அமித்ஷாவை வரவேற்க புதுக்கோட்டைக்கு படையெடுப்போம் - நயினார் நாகேந்திரன்
தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழா இன்று நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
மக்கள் மனமெங்கும் நிறைந்திருக்கும் மீனாட்சி அம்மனின் அருளாசியோடும். தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் தீயசக்தி திமுகவிற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடும். கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதியன்று சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இருந்து நமது வேள்வி யாத்திரையைத் தொடங்கினோம். திமுக அரசின் கோரப்பிடியில் சிக்கி நிலைகுலைந்து கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த யாத்திரைக்குத் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" எனப் பெயர் சூட்டினோம்.
கடந்த 84 நாட்களில் சுமார் 2400 கி.மீ-க்கும் அதிகமாகப் பயணித்து, 52 அமைப்பு மாவட்டங்களுக்கும் 33 அலுவல் மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடம் நேரடியாக உரையாடி இருக்கிறோம். நம்மை முடக்க நினைத்த திமுக அரசின் அத்தனை அடக்குமுறைகளையும் முறியடித்து கிட்டத்தட்ட 47-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும் 34-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
காற்றுக்கு ஓய்வேது. நீருக்கு சோர்வேது என்பது போல. கொஞ்சம் கூட களைப்பு தட்டாமல் இந்த யாத்திரையின் அனைத்துப் பணிகளையும் தேனீக்களின் சுறுசுறுப்புடன் முன்னின்று செய்ததோடு, எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இப்பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக மாற்றியுள்ளனர் நமது கட்சி நிர்வாகிகள். நமது தொண்டர்களின் அன்பையும், நிர்வாகிகளின் கடின உழைப்பையும், மூத்த தலைவர்களின் அர்ப்பணிப்பையும் கண்டு இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன். கர்வம் கொண்டேன். "இப்படை தோற்கின், எப்படை வெல்லும்" என்பதை நமது ஒற்றுமையின் மூலம் மீண்டுமொருமுறை நாம் நிரூபித்துள்ளதைக் கண்டு சொல்ல முடியா ஆனந்தத்தில் திளைத்துள்ளேன்.
இவ்வாறு நமது தாமரை சொந்தங்களின் நெஞ்சுரத்தாலும், விடா முயற்சியாலும் வரலாறு காணாத வெற்றிப்பயணமாக மாறிய இந்த வேள்வித் தவத்தின் நிறைவு விழாவிற்கு நமது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம். கடந்த மூன்று மாதங்களாக ஓடி இளைத்த நமது வியர்வைத் துளிகளின் மீது சூடப்படும் மணிமகுடம். உலகம் வியக்கும் அரசியல் சாணக்கியரான நமது மத்திய உள்துறை மந்திரி கலந்து கொண்டு நம்மைச் சிறப்பிக்கும் உயர்வான அத்தருணத்தை நாம் ஆற, அமர முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
எனவே, இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில், நமது கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நமது வெற்றியின் முழக்கத்தை ஊரறியச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இத்தனை நாளும் என்னுடன் தோளுக்குத் தோளாக நின்று எனக்குப் புத்துணர்வூட்டி, இப்பயணத்தை நிறைவு செய்ய எனக்கு ஊன்றுகோலாக நின்ற உங்கள் அனைவரையும் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.