காதல் திருமணம் செய்வது கடினம்: உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு
காதல் திருமணம் செய்வதுதான் மிகவும் கடினம் என துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.;
மதுரை,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இல்ல திருமண விழாவில் துணை உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கண்டிப்பாக இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ளேன்.
இங்கு வந்தபோதுதான் இது காதல் திருமணம் என்று கூறினார்கள். பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்துவைப்பது சிறப்பான நிகழ்ச்சிதான். ஆனால் அதைவிட கடினம் காதல் திருமணம். எல்லோரும் காதல் திருமணம் எளிது என்று நினைப்பார்கள்.
ஆனால் அது கடினம்.முதலில் இருவரும் காதலை வெளிப்படுத்த வேண்டும். ஒருவரையொருவர் காதலை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். பின்னர் இருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைக்க வேண்டும். அடுத்து சொந்தக்காரர்கள் எல்லாம் கிளம்பி வருவார்கள். பல்வேறு இடங்களில் இருந்து பிரச்னை வரும். தடை போட நினைப்பார்கள்.
அனைத்து தடைகளையும் மீறித்தான் இன்று இங்கு ஒரு காதல்திருமணம் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மணமக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்” இவ்வாறு அவர் கூறினார். உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசும் போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது மனைவி கிருத்திகாவை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார் நினைவுகூரத்தக்கது.