தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் கைது; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
குரும்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் பைக்கில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.;
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள மேலகடம்பா, வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் எழில் மோகன் (வயது 24). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 25ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான ராஜன் மகன் பாலமுருகனுடன் பைக்கில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.
மதகின் அருகிலுள்ள சாலையோரத்தில் குரும்பூர், நெட்டையன் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துசூர்யா(22), முத்துகுமார் மகன் கோபி(23), கல்லாம்பாறையைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன்களான காளிராஜ்(33), பேச்சிராஜ்(31), குரூகாட்டூர், வடக்குத் தெருவைச் சேர்ந்த பால் மகன் சுபாஷ்கர் மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எழில் மோகனின் வாகனம் வேகமாக சென்றபோது, சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீர் அவர்கள் மீது தெறித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எழில் மோகனை திட்டியுள்ளனர். எழில் மோகன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் அனைவரும் எழில் மோகனை தாக்கினர். அப்போது முத்து சூர்யா மறைத்து வைத்திருந்த வாளால் அவரின் தலையில் வெட்டிவிட்டு, அனைவரும் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த எழில் மோகனின் சகோதரர்கள் சுகுமார், பிரியவதன், சந்தோஷ் முகிலன், பாலமுருகன் ஆகியோர் அவரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 26ம் தேதி 17 வயது இளஞ்சிறாரை கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.