10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-12 20:32 IST

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த எஸ்தோ ஜோ(எ) தர்மராஜ் மகன் நிர்மல்குமார் (வயது 42) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (12.12.2025) குற்றவாளி நிர்மல்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்