"ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 வழங்குகிறது, என் திராவிட மாடல் அரசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் இருந்தது. அதன்படி அரசு அதிகாரிகளிடம், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் ரொக்கப்பரிசை இன்று அறிவித்தார். ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல். உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 திராவிட மாடல் அரசு வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்! உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது #திராவிட மாடல் அரசு! பொங்கலோ பொங்கல்! என அதில் பதிவிட்டுள்ளார்.