எம்.ஜி.ஆர்.பெயர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-02 19:22 IST

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், அவருடைய பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ் மாநாடு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத் தமிழர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நீக்கி அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும்.

எனவே, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதிய புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்