பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.;

Update:2025-05-07 11:42 IST

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

நீதி கிடைத்தது!... பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பஹல்காமில் கொல்லப்பட்டவர்களுக்கு கிடைத்த நீதி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதம் மனித குலத்தின் எதிரி. அது எந்த வகையில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையில் துல்லியமாக தாக்குதல் நடவடிக்கை எடுத்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். இந்தியனாக பெருமை கொள்கிறேன். ஜெயஹிந்த்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்