மந்தைவெளியில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து, வணிக வளாக கட்டுமான பணி: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ரூ.60 கோடி செலவில் ராஜீவ்காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;

Update:2026-01-22 15:05 IST

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.1.2026) தலைமைச் செயலகத்தில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் 167 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மந்தைவெளி பேருந்து முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்:

சென்னை, மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் 167 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம் 6,625 சதுர மீட்டர் நிலப்பரப்பில், மொத்தம் 29,385 சதுர மீட்டர் கட்டுமானப் பரப்பளவைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சொத்து மேம்பாட்டுத் திட்டம், கோபுரம் 1 (Tower A) மற்றும் கோபுரம் 2 (Tower B) ஆகிய இரண்டு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு கோபுரங்களும் இரண்டு அடித்தளங்கள், ஒரு தரைதளம் மற்றும் ஏழு மேல் தளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோபுரம் 1 (பேருந்து பணிமனை கட்டிடம்): இது சில்லறை வணிகத்தை (Retail) மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. தரைதளம் சில்லறை வணிக பயன்பாட்டிற்காகவும், ஒருங்கிணைந்த மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளம் முதல் ஏழாவது தளம் வரை சில்லறை வணிக இடங்களுக்காக ஒதுக்கப்படும்.

கோபுரம் 2 (முனையக் கட்டிடம்): இது ஒரு பல்நோக்கு வணிக மேம்பாட்டுத் திட்டமாகும். தரைதளத்தில் சில்லறை வணிக இடங்கள், ஒருங்கிணைந்த மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் கட்டமைப்பு மற்றும் பேருந்து நிறுத்த வசதிகள் இடம்பெறும். முதல் தளம் முதல் ஏழாவது தளம் வரை வணிகப் பயன்பாட்டிற்காக (Commercial use) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டுத் திட்டம், மந்தைவெளி சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மெட்ரோ நிலையம் மற்றும் கட்டிட வசதிகளுக்கு இடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டம் சுமார் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.

ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை திறந்து வைத்தல்:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் 60 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மெட்ரோ ரெயில் (CMRL) இரண்டாம் கட்டத் திட்டத்தின் 3-வது வழித்தடத்தின் உயர்மட்டப் பகுதி பழைய மகாபலிபுரம் சாலை (OMR) வழியாகச் செல்கிறது. ஒக்கியம் மடுவின் குறுக்கே தற்போதுள்ள சாலைப் பாலம் சுமார் 96 மீட்டர் நீளம் கொண்டது. மெட்ரோ ரெயில் கட்டமைப்புகள் தற்போதுள்ள நெடுஞ்சாலைப் பாலத்தின் தூண்களுடன் சீரமைக்கப்பட்டு, நீரோட்டத்திற்குத் தடையின்றி அமைக்கத் திட்டமிடப்பட்டது.

டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளப்பெருக்கின் போது, ஒக்கியம் மடுவில் நீர் வெளியேற்றும் திறன் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. மேலும், பாலத்தின் நீளம் ஒக்கியம் மடுவின் மேல்புறம் மற்றும் கீழ்ப்புறங்களில் உள்ள அகலத்தை விடக் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள பாலத்தை இடித்துவிட்டு, 205 மீட்டர் நீளத்திற்கு சாலைப் பாலம் மற்றும் மெட்ரோ தூண்களை இணைத்து புதிய பாலத்தைக் கட்ட CMRL தீர்மானித்தது. இது 4x40 மீட்டர் மற்றும் 1x45 மீட்டர் இடைவெளிகளுடன், கூடுதல் 1.5 மீட்டர் வரை செங்குத்து இடைவெளியை (Vertical Clearance) உயர்த்தி திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஒக்கியம் மடுவை அகலப்படுத்தவும், அதன் நீர் ஓட்டத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. விரைவான கட்டுமானத்திற்காக எஃகு கட்டமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதுள்ள பாலத்திற்கு அப்பால் தலா 2 வழிகளைக் கொண்ட இரண்டு புதிய சாலைப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய பாலங்களில் போக்குவரத்து மாற்றப்பட்ட பிறகு, பழைய பாலங்கள் இடிக்கப்படும். பழைய பாலங்கள் இடிக்கப்பட்ட பின், ஏற்கனவே அமைய பெற்றுள்ள 2 வழி சாலை பாலங்களை ஒட்டி கூடுதல் 1 வழி கொண்ட 2 சாலைப் பாலங்கள் மற்றும் மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சிறப்பு முயற்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், போக்குவரத்து துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், மாநகர் போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் டி.பிரபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்