செல்போனில் காதலி சண்டை... விரக்தியில் நீட் தேர்வு பயிற்சி மாணவர் எடுத்த விபரீத முடிவு
கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.;
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆருண் பாஷா(வயது 22). பார்மசியில் டிப்ளமோ முடித்துவிட்டு ‘நீட்’ தேர்வுக்காக அவரது அண்ணனுடன், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கோகுல் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஆருண் பாஷா, தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீெரன அவர், தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆருண்பாஷா பரிதாபாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், ஆருண் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்துகொண்ட ஆருண்பாஷா, ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ‘நீட்’ தேர்வுக்காக படித்து கொண்டிருந்தார். அப்போது இளம்பெண் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு முதல் அதிகாலை வரை ஆருண் பாஷாவுடன் அவரது காதலி செல்போனில் பேசி சண்டையிட்டதாகவும், இதனால் விரக்தி அடைந்த அவர், கையை அறுத்துக்கொண்டதுடன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.