நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு செய்தல் திட்டம்; 70 வயதை கடந்த 50 தம்பதிகள் கௌரவிப்பு

நெல்லையப்பர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முதிய தம்பதிகளிடம் ஆசி பெற்றனர்.;

Update:2025-12-09 11:45 IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி 70 வயது பூர்த்தி அடைந்த முதிய தம்பதியர்களை கோவில் சார்பாக சிறப்பு செய்யும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் நெல்லை ஆணையர் மண்டலம் சார்பில் கடந்த மாதம் 10-ந் தேதி 70 வயது நிறைவடைந்த 55 தம்பதிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் நடந்தது. நேற்று 2-ம் கட்டமாக மேலும் 50 முதிய தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகநயினார் சன்னதியில் நடந்தது.

இதையொட்டி கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. பூஜை நிறைவடைந்த பிறகு 50 முதிய தம்பதிகளும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் பிரமுகர்கள் இணைந்து மாலை அணிவித்து, புத்தாடைகள், சீர்வரிசை பொருட்கள், பழங்கள், பிரசாதம் அடங்கிய தாம்பூல தட்டுகளை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் உள்பட பலரும் முதிய தம்பதிகளிடம் ஆசி பெற்றனர். 2-வது முறையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தங்களுக்கு மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக முதிய தம்பதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்