நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில்: சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் காலி: கூடுதல் ரெயில் அறிவிக்கப்படுமா?
வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைகிறது.;
சென்னை,
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில், வரும் 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரெயிலை தெற்குரயில்வே அறிவித்தது. நெல்லை-தாம்பரம் இடையே ஒரு வழி சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரம் வரும் ஒரு வழி சிறப்பு ரெயில் (வண்டி எண்.06178), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்த ரெயிலுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விடுமுறை முடிந்து ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதால், நெல்லை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட பயணிகள் பயன்பெறும் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.