தமிழகத்திற்கு புதிய அம்ரித் பாரத் ரெயில்; பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி
பொதுமக்களின் தனிப்பட்ட பயணங்களும் தொழில் ரீதியிலான பயணங்களும் எளிதாகவுள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் இணைக்கும் புதிய அம்ரித் பாரத் ரெயில் இயக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே மந்திரிஅஸ்வினி வைஷ்ணவுக்கும் மத்திய இணை மந்திரி எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, எல். முருகன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ரெயில்கள் மூலம் தென் மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கின்ற வகையில், சென்னை-கன்னியாகுமரி இடையிலான இரயில் போக்குவரத்தை, திருவனந்தபுரம், செகந்தராபாத் மற்றும் மங்களூரு வழியாக இயக்குவது தொடர்பாக, சமீபத்தில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன்.
சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும், முக்கிய ரெயில் நிலையங்களையும் இணைப்பதற்கான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி வரும் நமது மத்திய அரசு, தற்போது இந்த ஆலோசனையின் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, மேற்கண்ட ரெயில் நிலையங்களை இணைக்கும் புதிய அம்ரித் பாரத் ரெயில் இயக்கத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.
அதன்படி அம்ரித் பாரத் ரெயிலானது, கன்னியாகுமரி, மங்களூரு, சர்லாபள்ளி, தாம்பரம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களையும், அதற்கு உட்பட்ட இரயில் நிலையங்களையும் இணைக்கின்றது. இதன்மூலம், பொதுமக்களின் தனிப்பட்ட பயணங்களும் தொழில் ரீதியிலான பயணங்களும் எளிதாகவுள்ளது.
தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் தொடர்ந்து தீர்வு கண்டு வரும் பிரதமர் மோடிக்கும் , மத்திய ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ்வுக்கும், தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
என தெரிவித்துள்ளார்.