திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.;
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37 வயது). தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4-ந்தேதி ஜெயஸ்ரீ (25 வயது) என்பவருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆனது. கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கார்த்திகேயன் தனது மனைவி ஜெயஸ்ரீயை வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ளே வைத்து வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்றொரு அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயஸ்ரீ ஜன்னல் கதவைத் திறக்க கூறி சத்தம் போட்டுள்ளார்.
எதிர் வீட்டில் வசித்து வரும் கார்த்திகேயனின் பெற்றோர் மற்றும் அருகில் இருப்பவர்கள் வெளியே வந்துள்ளனர். அந்த நேரத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் அவ்வழியாக ரோந்து சென்றுள்ளனர். பின்னர் போலீசார் மற்றும் கார்த்திகேயனின் பெற்றோர் மாடிக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கார்த்திகேயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.