நீலகிரி: மூதாட்டியை கொன்ற புலி கூண்டில் சிக்கியது

கூடலூர் அருகே மூதாட்டியை கொன்ற புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.;

Update:2025-12-11 22:56 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ந் தேதி புலி தாக்கி நாகியம்மாள் (வயது 60) என்பவர் உயிரிழந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி வனத்துறையினர் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் புலியை பிடிக்க அதன் நடமாட்டம் உள்ள 5 இடங்களில் கூண்டு வைத்தும், 29 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் அந்த பகுதியில் நடமாடி வந்தது வயதான ஆண்புலி என்பதும், இந்த புலிதான் நாகியம்மாளை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.

கால்நடைகளையும் வேட்டையாடியது

இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கினர். இதற்காக 40 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூண்டுகளை வைத்தும் காத்திருந்தனர். ஆனால் புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளையும் புலி வேட்டையாடி வந்தது.

இதனால் ஆடு, மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளி மாணவர்கள் கூட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர்.

கூண்டில் சிக்கியது

தொடர்ந்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மாவனல்லா பகுதியில் வைத்த கூண்டில் புலி சிக்கியது.

பிடிபட்ட புலி 12 வயது மதிக்கத்தக்க ஆண்புலி என்பதும், வேட்டையாட முடியாததால் ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் தாக்கி வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய புலியை வனத்திற்குள் விடலாமா?, அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கலாமா? என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 16 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்