அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது - மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.;

Update:2025-12-31 13:35 IST

சென்னை,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பரீட்சைக்கு தயாராகி வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்தபோதிலும், தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் எதுவும் பேசவில்லை. ஆனால் இரு தரப்பிலும் சில மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

இதற்கிடையில் அண்மையில் சென்னை வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அ.தி.மு.க.-பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாகவும் தகவல் வெளியானது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கு நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் அரசியல் களத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மக்களை சந்தியுங்கள். கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். திமுக அரசு செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். எஸ்.ஐ.ஆர். பணிகளை கண்காணியுங்கள். அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடுபடக்கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். மேலும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்