நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகள் 96 ஆக அதிகரிப்பு - அரசிதழில் வெளியீடு
நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகள் 96 ஆக அதிகரித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தற்போது 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 27 கிராம ஊராட்சிகள் மலைப்பகுதிகளாக இருப்பதாலும், போதுமான சாலை வசதிகள் இல்லாமலும், குக்கிராமங்கள் அதிக அளவில் இருப்பதாலும் ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி அலுவலகங்களை அணுகுவதற்கு வசதிகள் இல்லாத நிலையில் இந்த ஊராட்சிகளை பிரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நீலகிரியில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து, அவற்றை 88 கிராம ஊராட்சிகளாகவும், மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளுடன் மறுசீரமைப்பு செய்து கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கக்குச்சி, தும்மனட்டி, உல்லத்தி, தொட்டபெட்டா, தூனோி, கடநாடு, எப்பநாடு, கூக்கல், நஞ்சநாடு, பாலகொலா, இத்தலார், முள்ளிகூர், மேல்குந்தா ஆகிய 13 கிராம ஊராட்சிகளை 38 கிராம ஊராட்சிகளாக பிரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலூர், உபதலை, எடப்பள்ளி, பேரட்டி ஆகிய 4 கிராம ஊராட்சிகளை 11 கிராம ஊராட்சிகளாக பிரிக்கலாம் எனவும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெடுகுளா, ஜக்கனாரை, நடுஹட்டி, கொணவக்கரை, கெங்கரை, தேனாடு, குஞ்சப்பனை ஆகிய 7 கிராம ஊராட்சிகளை 19 கிராம ஊராட்சிகளாகவும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெலாக்கோட்டை, மசினகுடி, சேரங்கோடு ஆகிய 3 கிராம ஊராட்சிகளை 20 கிராம ஊராட்சிகளாக பிரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகள் மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் டிசம்பர் 17-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் 20-ந் வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, இறுதி செய்து அதனை நீலகிரி மாவட்ட அரசிதழில் இறுதி அறிவிப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.