நான் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
நீதிமன்ற உத்தரவை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது என்ன விதமான செயல் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.;
மதுரை,
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவு அமல்படுத்தப்பட வில்லை என்பதால் அதிகாரிகள் மீது அதே நீதிபதி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் டிசம்பர் 17-ந் தேதி (அதாவது இன்று) தமிழக தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி. பி. ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் (காணொலி) மூலம் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் வந்தது. அப்போது தலைமை செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக ஆஜராகினர்.
தலைமை செயலாளர் கூறுகையில், எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில்தான் பிறப்பித்தோம். தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றக்கூடாது என்பதில் எந்த கருத்தும் இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தால் அதை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி நிறைவேற்றாமல் இருப்பது என்ன விதமான செயல்" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? - என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.