அதிகரிக்கப்போகும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை
ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.;
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடுகிறது என்பதுதான், வாக்காளர்களை அவர்களுக்கு சாதகமாக வாக்களிக்க தூண்டுகோலாக அமையும். ஏற்கனவே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், காஞ்சீபுரத்தில் பேசும்போது, குடும்பத்திற்கு ஒரு வீடு-மோட்டார் சைக்கிள் என்பது உள்பட 12 வாக்குறுதிகளை அறிவித்தார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தனது பிரசார நிகழ்ச்சியில் மலைவாழ்-மீனவ மக்களுக்கு வீடுகள் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை கூறி இருக்கிறார்.
தி.மு.க. கடந்த சட்டசபை தேர்தலின்போது அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்தது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அந்தாண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளின்போது காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் அதில் பலன் அடைந்தனர். ஆனால் இந்த பட்டியலில் விடுபட்ட நிறைய பெண்களுக்கு, தங்களுக்கும் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை அளித்தது.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த ஏமாற்றம் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு விடுபட்ட பெண்களுக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விதிகளை தளர்த்தியது. அதனால் மேலும் ஏராளமானவர்கள் விண்ணப்பித்ததால், 2-ம் கட்டமாக கடந்த 12-ந்தேதி முதல் மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் தற்போது ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். மேலும் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,000 வழங்குவது தொடக்கம் மட்டும்தான். இந்த தொகை நிச்சயம் உயரும் என்ற மகளிர் மனம் குளிரும் அறிவிப்பை வெளியிட்டு விட்டார். இந்த அறிவிப்பு தேர்தல் வாக்குறுதிகளில் இடம் பெறுமா? அல்லது அதற்கு முன்பே அமலுக்கு வந்துவிடுமா? என்பதுதான் பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த தொகை எவ்வளவாக இருக்கும்? என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வும் பெண்களுக்கு ரூ.1,500 உரிமைத்தொகை அறிவித்து இருந்தது. எனவே இந்த முறையும் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்துக்கு மேலான ஒரு தொகையை கொடுப்போம் என்ற வாக்குறுதி நிச்சயமாக இருக்கும் என்பதால் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தமிழக பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரத்துக்கு மேல் கிடைக்கப்போவது உறுதி. இந்த தொகை பெண்கள் சினிமா செல்வது உள்ளிட்ட சிறு செலவுகளை யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களே சமாளித்து கொள்ள உதவினாலும் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், நீண்ட கால முன்னேற்றத்துக்கும், குடும்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்பை போல இந்த தொகை கைகொடுக்குமா? என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.