’பராசக்தி’ பட வழக்கு: தடை உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு
பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது.;
சென்னை,
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா இன்று உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது என்றும், இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் உடனடியாக கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஜனநாயகனை தொடர்ந்து நாளை (ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்ட பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்கவில்லை. தணிக்கை வாரிய மறு ஆய்வுக் குழு கேட்ட வரலாற்று தரவுகளால் பராசக்தி படத்திற்கு சிக்கல் எற்பட்டுள்ளதாகவும், வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதை என்ற நிலையில் போதிய தரவுகள் இல்லை என வாரியம் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.