பரப்பலாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பரப்பலாறு அணை உள்ளது.;
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடியாகும். இந்நிலையில், பாசன வசதிக்காக பரப்பலாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில்,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையிலிருந்து, பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திரம் கண்மாய், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரக்கண்மாய் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் பழைய பாசன நிலங்களில், நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு 13.01.2026 முதல் 23.01.2026 வரை 51.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட தாசாரிபட்டி, விருப்பாட்சி, தங்கச்சியம்மாபட்டி, வக்கம்பட்டி, வெரியப்பூர் மற்றும் ஜவ்வாதுப்பட்டி ஆகிய கிராமங்களிலுள்ள 1323.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.