திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கார் மோதி விவசாயி பலி
எம்.எல்.ஏவின் கார் மோதி வயல் வேலைக்காக பைக்கில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.;
திருவையாறு,
திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் கார் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, தனது காரில் எம்.எல்.ஏ சந்திரசேகரன் வந்துள்ளார்.அதே நேரத்தில், சென்னமானாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 65) என்பவர் வயல் வேலைக்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் எம்.எல்.ஏவின் காரும் கோவிந்தராஜ் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், கோவிந்தராஜ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எம்.எல்.ஏ., சந்திரசேகரன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.