ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு

நெல்லை அருகே சுத்தமல்லி பகுதியில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-12-04 21:49 IST

நெல்லை அருகே பேட்டையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகர் அல்மதீனா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சக்கரியா. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் முகம்மது சாதிக் (வயது 28). இவர் வீட்டின் அருகிேலயே சிறிய அளவிலான ஓட்டல் நடத்தி வருகிறார். மற்ற 2 பேரும் கல்லூரியிலும், ஐ.டி.ஐ.யிலும் படித்து வருகிறார்கள். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.

கடந்த 1ம்தேதி இரவு ஓட்டலில் வியாபாரத்தை முடித்து விட்டு முகம்மது சாதிக் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கினார்கள். நேற்று முன்தினம் அதிகாலையில் முகம்மது சாதிக் எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மாடிப்படிகளில் கண்ணாடி பாட்டில் துண்டுகள் உடைந்து சிதறிக்கிடந்தன. மேலும் படியையொட்டிய சுவரில் தீப்பிடித்து எரிந்த கரும்புகையும் படிந்திருந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சேரன்மாதேவி டி.எஸ்.பி. அஸ்வின் ஆனந்த ஆரோக்கியசாமி, சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, தடயவியல் நிபுணர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, முகம்மது சாதிக் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்று இருப்பது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்