இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடைபெறுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் மணிகண்டன், இருதயராஜ்குமார், இசக்கிமுத்து காவலர்கள் பேச்சிராஜா, காபிரியேல் ஆகியோர் நேற்று அதிகாலையில் வீரபாண்டியபட்டனம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகளில் Hydroxyprogesterone caproate injection IP- 890 எண்ணம், Intravenous fat Emulsion for infusion Syrup- 444 எண்ணம், Pregab Tablets- 7,50,000 எண்ணம், Disulfiram tablets 1.P (Esperal) Tablets- 77,900 எண்ணம், Cadila Tablet- 11,750 எண்ணம், Amantrel Tablet- 2,100 எண்ணம் என்றவாறு மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இந்த மருந்து பொருட்களின் மதிப்பு ரூ.1.25 கோடி ஆகும்.
இந்த மருந்து பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரைக் கண்டதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுடன் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். பறிமுதல் செய்த மருந்து மற்றும் மாத்திரை பொருட்களை கியூ பிரிவு போலீசார், மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.