திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் காவலர் தின உறுதிமொழி ஏற்பு
காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சிறப்புகள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் சம்பந்தமாக கண்காட்சி நடந்தது.;
தமிழக முதல்-அமைச்சரால் தமிழ்நாடு காவலர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திருநெல்வேலி மாவட்டத்தில், காவலர் தினமானது கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் தொடக்கமாக, திருநெல்வேலி ஒருங்கிணைந்த ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரசண்ணகுமார் (மேற்கு), வினோத்சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் மாவட்ட, மாநகர காவல் அதிகாரிகள், காவலர்கள், காவல் பணியில் தங்களது இன்னுயிரை நீத்த காவலர்களுக்கு காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் காவல் பணிக்காக தங்களது உயிரினை இழந்தவர்களின் தியாகங்கள் பற்றியும், காவல் பணியின் சிறப்பு பற்றியும் விரிவாக பேசினார். மேலும் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சிறப்புகள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் சம்பந்தமாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கண்காட்சியினை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
தொடர்ந்து காவலர் தினம் சம்பந்தமாக உறுதிமொழி மாவட்ட எஸ்.பி. தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும், மாவட்ட காவல் அலுவலகத்திலும் அனைத்து காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களால் எடுக்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று காவலர் தின நாளினை முன்னிட்டு உறுதிமொழி காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களால் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து காவல்துறை பொதுமக்கள் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.