தூத்துக்குடி பனிமய மாதா ஆலய வளாகத்தில் அரசியல், திரைப்பட விளம்பரங்களுக்கு தடை

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்குள் வருபவர்கள் அரசியல் கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள், கொடிகளை ஆலயத்தின் உட்பகுதியிலோ, வளாகத்திலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-07 12:18 IST

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய வளாகத்தில் அரசியல் கொடி, சின்னங்கள் மற்றும் திரைப்பட விளம்பரங்களை பயன்படுத்தக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்திற்கு வருகை தரும் இறைமக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் மூன்று நடைமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. அரசியல் அடையாளங்களைத் தவிர்த்தல்:

அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் பேராலயத்திற்கு வரும்போது கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளை பேராலயத்தின் உட்பகுதியிலோ அல்லது வளாகத்திலோ பயன்படுத்தக்கூடாது. ஆலய வளாகத்திற்குள் கோசங்களும், வெடிகளும் போடக்கூடாது.

2. திரைப்பட விளம்பரங்களுக்குத் தடை:

திரைப்பட ப்ரோமோஷன் (Promotion) மற்றும் விளம்பர நோக்கத்திற்காக பேராலயத்தையோ, பேராலய வளாகத்தையோ பயன்படுத்தக் கூடாது. விளம்பர நோக்கில் புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

3. பேராலயப் புனிதத்தைப் பேணுதல்:

பேராலயத்தின் புனிதத்தையும், அன்னையின் மாண்பையும் போற்றும் வகையில் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம். ஆலயத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலான அல்லது அவமதிக்கும் வகையிலான அனைத்து செயல்களையும் இனி வரும் காலங்களில் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்