தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி நெல்லையில் மறியல்: 401 பேர் கைது
தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி.யு. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருநெல்வேலியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி.யு. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருநெல்வேலியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின்போது, தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில், வாக்குறுதி எண் 313-ல் கூறியபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி நிரந்தரப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். 1993-ல் பணியில் சேர்ந்த பணியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். குழந்தைகள் நலன் கருதி காலி பணியிடங்களை நிபந்தனையின்றி நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. திருநெல்வேலி மாவட்ட தலைவர் முருகன் மறியல் போரட்டத்தை துவக்கி வைத்தார். அங்கன்வாடி சங்க மாவட்ட தலைவர் பிரேமா, மாநில செயற்குழு உறுப்பினர் மலைபகவதி, மாவட்ட பொருளாளர் இந்திரகலா, துணைத்தலைவர் பூபதி, ஓமணா, கல்யாணி, முனியம்மாள், இணைச்செயலாளர் சாந்தகுமாரி, வசந்தாபாய், ராமலெட்சுமி, லலிதா, தங்கம்(எ)விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் உட்பட 401 அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர்.