100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயரிடப்பட்டது. கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.
கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்திட மக்களவை கூட்டத் தொடரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. இதிலிருந்து மகாத்மா காந்தியின் மீது பா.ஜ.க. வைத்திருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.
எனவே, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் எனது தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் முன்னிலையில் 18.12.2025 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா கூட்டணி தலைவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், அகில இந்திய காங்கிரஸ் இந்நாள் - முன்னாள் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், சர்க்கிள் மற்றும் வட்ட கமிட்டி தலைவர்கள் மற்றும் அதன் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.