தொடர் கனமழையால் மெரினாவில் தேங்கிய மழை நீர்.. கடற்கரைக்கு செல்ல தடை
சென்னையில் நேற்று முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.;
சென்னை,
டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுடைந்தாலும், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கனமழையை கொடுத்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் இதனால் வட மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்து வரும் மழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரும் நிலையில், மழையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை இன்று இரவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக மெரினா கடற்கரை மணல் பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் கடற்கரையின் சில பகுதிகள் கடல் போல காட்சியளிக்கின்றன. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.