ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.;
கோப்புப்படம்
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி 4 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றிருந்த 30 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாககூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மீனவர்கள் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரத்தில் நேற்று மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவ சங்கங்களின் தலைவர்கள் என்.ஜே.போஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் மற்றும் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர் ஒருவரின் மனைவி திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஏற்கனவே மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.