சல்லியர்கள்' திரைப்படத்திற்கு திரையரங்குகள் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது - சீமான்

சல்லியர்கள் படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.;

Update:2026-01-02 18:57 IST

சென்னை,

கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சல்லியர்கள். கருணாஸ் நடித்துள்ள இப்படம் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படாத காரணத்தால் இப்படத்தின் வெளியீடு தடைபட்டது. இப்படத்திற்கு வெறும் 27 தியேட்டர்களே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இன்று இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில், சல்லியர்கள் படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் குறித்து இயக்குநர் சேரன் போட்டுள்ள பதிவில், “OTT Plus என்ற தளத்தில் "சல்லியர்கள்".. தம்பி கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவிய படைப்பு. திரையரங்கங்கள் சரியாக கிடைக்காததால் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு நாம் தரும் ஆதரவே இன்னும் நல்ல படங்கள் உருவாக வழிவகுக்கும்” என பதிவிட்டுள்ளார். இப்படம் ஏராளமானோர் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், #சல்லியர்கள் என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்தநிலையில், மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய 'சல்லியர்கள்' திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என 'சல்லியர்கள்' திரைப்படம் விவகாரம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?

திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.

ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்