இன்சூரன்ஸ் பணத்துக்காக உறவினர் அடித்துக்கொலை - திட்டம் தீட்டிக் கொடுத்த பாலிசி முகவர் உள்பட 4 பேர் கைது
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக உறவினரை அடித்துக்கொன்ற மருமகன், பேரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அமராவதி,
ஆந்திர மாநிலம் கசிம் கோட்டா மண்டலம் கொத்தபள்ளி பகுதியில் கடந்த 9-ந் தேதி சாலையோரம் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் சடலமாக மீட்கப்பட்டது குர்ரு நாராயணமூர்த்தி (வயது 54) என்பவரது உடல் என்பதை போலீசார் கண்டறிந்தனர். நாராயணமூர்த்தியின் உடல் மீது இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளுடன் இருந்ததால், இதை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, உயிரிழந்த நாராயணமூர்த்தியின் பெயரில் 6 மாதங்களுக்கு முன் பல கம்பெனிகளில் ரூ.1.08 கோடிக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாமனார் நாராயண மூர்த்தி மரணம் அடைந்தால் அவர் பெயரில் போடப்பட்ட இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் தங்களுக்கு வரும் என்று நாராயணமூர்த்தியின் மருமகன் சுங்கரி அன்னவரம் மற்றும் பேரன் சுங்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பத்தன்று நாராயணமூர்த்தியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு அவரது உடலை சாலையில் வீசிவிட்டு அதை சாலை விபத்தாக மாற்றி சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் கொலை கும்பலுக்கு திட்டம் தீட்டி தந்ததாக இன்சூரன்ஸ் பாலிசி முகவர் பீமுனி நானாஜி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த தாத்தாஜி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.