குடியரசு தினம், தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்கள், குடியரசுதினத்தை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.;

Update:2026-01-23 07:55 IST

கோப்புப்படம்

சென்னை,

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

23/01/2026 (வெள்ளிக் கிழமை) 24/01/2026 (சனிக் கிழமை), 25/01/2026 (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் 26/01/2026 (குடியரசுதினம்) ஆகிய நாட்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23/01/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும், 24/01/2026 (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/01/2026 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும் 24/01/2026 சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 23/01/2026 மற்றும் 24/01/2026 ஆகிய நாட்களில் 24 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 26/01/2026 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருப்பூர், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடக்ளுக்கு 250 சிறப்பு பேருந்துகள் 26/01/2026 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 20,254 பயணிகளும் சனிக்கிழமை 12,811 பயணிகளும் ஞாயிறு அன்று 8,566 பயணிகளும் மற்றும் திங்கட்கிழமை 19,353 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாள, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06135) 23ம் தேதி (இன்று) இரவு 11.45 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நாளை மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06136) வருகிற 26ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்.

Tags:    

மேலும் செய்திகள்