சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ஹெல்மெட் அணிந்தபடி மர்ம நபர்கள் 3 பேர் ரவுடியை வெட்டிக்கொன்றனர்;

Update:2026-01-12 15:47 IST

சென்னை கொளத்தூர் 6வது தெரு மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ரவுடி ஆதிகேசவன் (வயது 23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 9 வழக்குகள் உள்ளன.

 ரவுடி ஆதிக்கும் , சென்னை ஆவடி ஏரிக்கரை தாழம்பூ தெருவை சேர்ந்த நவீன்குமார் மனைவி சுசித்ரா (வயது 21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த 18ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை நேற்று இரவு உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்தது குறித்து ஆதியிடம் சுசித்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து சுசித்ராவை பார்க்க ஆதி நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். சுசித்ராவை பார்த்துவிட்டு நேற்று இரவு மருத்துவமனை வளாகத்திலேயே ஆதிகேசவன் படுத்து உறங்கியுள்ளார்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்று அதிகாலை ஹெல்மெட் அணிந்தபடி மர்ம நபர்கள் 3 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆதிகேசவனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ஆதிகேசவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, ஆதிகேசவனை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ஆதிகேசவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரவுடி ஆதிகேசவனை வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி கொலையில் தொடர்புடையவர்கள் யார்? கள்ளக்காதல் விவகாரத்தில் கொலையா? வேறு சம்பவங்களில் பழிக்குப்பழியாக? ரவுடி ஆதிகேசவன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்