பயணியிடம் ரூ.60 லட்சம் கொள்ளை வழக்கு: 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.;
திருச்சி,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வளையம்பட்டி அருள்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32). கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.60 லட்சத்துடன் திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இவரிடம் போலீஸ் என்று கூறி ரூ.60 லட்சத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜங்ஷன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் அவரிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சி ரெயில்வே போலீஸ்காரர்களான ஜான்சன் கிரிஸ்டோகுமார் (43), தீனதயாள் (37) மற்றும் திருவெறும்பூரை சேர்ந்த ரஞ்சித் (40), ராஜேந்திரன் (45) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் ஜான்சன் கிறிஸ்டோகுமார், தீனதயாள் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டுள்ளார்.