சட்டவிரோதமாக மண் அள்ளியதாக செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம்?

திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.;

Update:2025-12-08 15:53 IST

கோவை,

கோவை மாவட்டம் சின்னத்தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள், நீர்வழித்தடங்களில் சட்டவிரோதமாக சுமார் 1.10 கோடி கன மீட்டர் அளவு மண் அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளை மூட கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த செங்கல் சூளைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதற்கிடையே செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் புதுடெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் (டெரி) நிபுணர்கள் சுமார் 4 மாதங்கள் ஆய்வு செய்தனர். பின்னர் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை செய்து இருந்தனர். அபராத தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 3 முறை கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி சூழல் பாதிப்புகளில் ஈடுபட்டதற்காக செங்கல் சூளைகளுக்கு சுமார் ரூ.900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் ஒவ்வொரு செங்கல் சூளைகளுக்கும் எவ்வளவு அபராத தொகை என்று தனித்தனியாக குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இந்த அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கும் என்றும், பின்னர் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க கோர்ட்டு உத்தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்